11 November 2014

துளிர் விடும் விதைகள் என் பார்வையில்...




துளிர் விடும் விதைகள் – கவிதைத்தொகுப்பை இப்போதுதான் வாசித்து முடித்தேன். தோழி கிரேஸின் தமிழார்வம் எப்போதுமே என்னை மிகவும் வியக்கவைக்கும். ஐங்குறுநூற்றுப் பாடலில் வரும் களவன் என்ற சொல்லுக்கான சரியான பதத்தை அறிந்துகொள்ள அவர் எடுத்த முயற்சிகள் வியப்பின் உச்சத்துக்கே என்னை அழைத்துச்சென்றன. ஆங்கிலத்திலும் தமிழிலுமாய் சங்க இலக்கியப் பாடல்களை அவர் தெளிவுற விளக்கும் பாங்கு என்னை அவரது பதிவுகளின்பால் பெரும் ஆர்வம் கொள்ளச் செய்திருந்தது. அவருடைய கவிதைகளைத் தவறாமல் வாசிக்கவும் தூண்டியது.

தோழி கிரேஸின் கவிதை நூல் வெளியீடு நடைபெறுவது அறிந்து மகிழ்ந்தேன். என் வாழ்த்துகளை மானசீகமாக அனுப்பிவைத்துவிட்டு என் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்த ஒருநாளில் கிரேஸிடமிருந்து தகவல் வந்தது. இன்னும் இரண்டு மூன்று நாட்களில் அவர் அமெரிக்கா கிளம்புவதாகவும் எனக்கு அவரது நூலின் மின்னூல் வடிவத்தை அனுப்பிவைப்பதாகவும் தெரிவித்திருந்தார். இவ்வளவு பணிகளுக்கிடையில் என்னை நினைவில் வைத்திருந்து அனுப்பிய அவரது அன்பைக் கண்டு நெகிழ்ந்துபோகிறேன். அவரது கவிதைகள் முன்பே பரிச்சயம் என்றாலும் ஒரு தொகுப்பாய் வாசிப்பது மாறுபட்ட அனுபவம்தான்.

கவிதை நூலுக்கு அழகும் சிறப்பும் சேர்க்கின்றன கவிஞர் முத்துநிலவன் ஐயா எழுதிய அணிந்துரையும், திரு. ராஜவேல் நாகராஜ் அவர்களுடைய முகவுரையும் முனைவர் எம்.ஏ.சுசீலா அவர்களுடைய  முன்னுரையும் கிரேஸின் தன்னுரையும்.

மாதா பிதா குரு தெய்வம் என்பார்கள். இங்கு தோழியோ மாதா பிதாவுக்கு முன்னால் தமிழ்த்தாயை வணங்கித்தான் பாக்களைத் துவங்கியிருக்கிறார். அன்னை தந்தையை அந்தந்த தினங்களில் வாழ்த்துவது அன்னை தந்தையின் அன்புக்கும் அவர்களுடைய ஆயுட்கால உழைப்புக்கும் முன்னால் வெகு சிறியதே என்கிறார்.

தந்தையின் அன்பைப்பற்றிக் குறிப்பிடும்போது

சூரியனுக்கு ஒரு சுடர் தருவதா?
கடலுக்கு ஒரு துளி தருவதா?

என்று கேட்கிறார். சூரிய அளவு அன்பைப் பெற்று சுடர் அளவு திருப்பித் தருகிறோம் என்னும் சிந்தனை எவ்வளவு வலியது. ஆனால் தாயின் அன்பைக் குறிப்பிடுகையில் என்ன சொல்கிறார் பாருங்கள். 

அளவிட முடியாத அவள் அன்புக்கு முன்
நன்றியில் அடைக்கமுடியாத அவள் அன்புக்கு முன்
வணங்குகிறேன் நேசிக்கிறேன்
அவள் அன்புக்கு முன் –
என்ன செய்தாலும் நிகராகாது அன்றோ?

முதலில் தமிழைப் போற்றி, தொடர்ந்து தாய் தந்தையை வணங்கி அடுத்த அற்புத உறவாய் நட்பைப் பாடி நம் நெஞ்சம் நிறைத்துவிட்டார்.

நண்பர் தினம் ஓர் தினம் ஆனாலும்
நண்பருடன்தான் அனைத்து தினமும்

என்கிறார் நட்பு இல்லையேல்.. கவிதையில்.

இயற்கை, சமூகம், வாழ்வியல் குறித்தான அக்கறை கிரேஸின் ஒவ்வொரு கவிதையிலும் வெளிப்படுவது சிறப்பு. மழையின் சார்பாக, மரங்களின் சார்பாக, நீரின் சார்பாக, நிலத்தின் சார்பாக என இயற்கையின் இருப்புகள் அனைத்தின் சார்பாகவும் பேசுகிறார். ஆதங்கம், ஆற்றாமை, குமுறல், கோபம், கெஞ்சல் என்று பல்லுணர்வுக் கலவையாய் தன்னுணர்வுகளை வெளிப்படுத்தி கவனத்தை ஈர்க்கிறார்.

ஓவியத்திலா காட்டவேண்டும்? என்ற கவிதையில்…

அறியாயோ? கண்ணைத் திறவாயோ மனிதா? – உன்
சந்ததிக்கு எம்மை ஓவியத்திலா காட்டவேண்டும்?
தோலிற்கு எம்மையும், மரத்திற்கு காட்டையும்
பேராசைக்கு இயற்கைச் சூழலையும் பலியாக்காதே!

எந்த விலங்கினத்தின் பார்வையில் எழுதப்பட்டது என்பது கவிதையின் எந்த இடத்திலும் வெளிப்படுத்தப்படவில்லை. புலியோ  மானோ சிங்கமோ சிறுத்தையோ இருக்கலாம். தோலைக் குறிப்பிடாவிடில் அதை ஒரு யானையாகவும் கொள்ளலாம். இன்னதுதான் என்று வரையறுக்கப்படாதது முதலில் ஒரு குறை போல் தெரிந்தாலும் காடுகள் அழிக்கப்படும்போது பாதிக்கப்படுபவை ஒட்டுமொத்த காட்டுவிலங்குகள்தாம் என்பதால் காட்டுவிலங்குகளில் எவற்றை வேண்டுமானாலும் வாசிப்பவர் உள்ளத்தில் தோன்றும் வினாவுக்கான விடையாய்ப் பொருத்திக்கொள்ளமுடியும் என்பதே இக்கவிதையின் சிறப்பாக அமைந்துவிடுகிறது.

ஆழி சேர்ந்திடுவேனோ மனம் மகிழ்ந்து? என்ற ஆற்றின் கேள்வியில் தொனிக்கிறது கலக்கம். நெகிழியின் குவிப்பால் ஆழி சேரும் வழி அடைபட்டுக்கிடப்பதை ஆதங்கம் மேலிட ஆறு தன் மொழியில் விடுக்கும் வேண்டுகோள் மனத்தை நெகிழ்த்துகிறது.

மழைநீரின் சேமிப்பின் மகத்துவமும் உணர்த்துகிறார்.

சொட்டு நீரும் தேவையின்றி சொட்டாமல்
கொட்டும் மழைநீர் சேமிப்போம் நாளைக்காய்!

என்கிறார். நீரை சேமிக்க சொன்னதோடு நின்றுவிடாமல் செயலிலும் இறங்குகிறார்.

அடப்போம்மா
நீதான் பூமியக் காப்பாத்தப் போறியா?
என்றாள் அவள்
நான்தான் இல்லை,
நானும்தான்
என்றேன் நான்.

அவ்வளவுதான். இந்த சிறு முயற்சியை வாசிக்கும் ஒவ்வொருவரும் கையிலெடுத்தாலே போதுமே.. சிறுதுளிகள் பெருவெள்ளமாகும்போது சிறு முயற்சிகள் பெருஞ்சாதனையாகாதா என்ன? அதுதானே தன் கவிதைகளின் நோக்கமும் என்கிறார் தோழி கிரேஸ்.

இயற்கைச்சூழல் மற்றும் சமூகக் கேடுகளை உணரவும், நல்ல மாற்றம் ஏற்படவும் எங்கோ ஒரு இடத்தில் என் கவிதைகள் வழிவகுக்குமானால் அதுவே என் கவிதைகளின் வெற்றி என்கிறார் தன்னுரையில்.

அடுத்து காதல் கவிதைகள்..

காதலின் அடைமொழிகள் தேவையில்லை, அடையாளத்தைப் பறிக்காமல் இருந்தாலே போதும், அதுவே காதலாகும் என்கிறார் என்னை நானாகவே கவிதையில்.

எதனோடும் உருவகிக்க வேண்டாம்
ஏதேதோ உவமையிலும் புகழவேண்டாம்
என்னை நானாகவே விரும்பிடு – என்பாதியே!

நிபந்தனையற்ற அன்பை பறைசாற்றுகிறது எப்படியும் பிடிப்பது கவிதை.

அனைத்திற்கும் ஒரு ‘தான்’ இருக்க
நீ மட்டும் எப்படியும் எப்படியும் பிடிப்பதெப்படி?

நியாயமான கேள்விதான். நிபந்தனையற்ற அன்பைக் கூறும் இந்தக் கவிதையை ரசிக்கும் வேளையில் நிபந்தனை சொல்லும் காதலொன்றும் புருவமுயர்த்தச் செய்கிறது.

எனக்காக எதுவும் செய்வாயா?
தன்மானம் விட்டுக்கொடுக்கும் எதுவும் தவிர.

அட இதுதான் புரிதல், இதுதான் காதல் என்று கொண்டாடுகிறது மனம்.
பெண்ணுக்கு அழகு அணிகலன்களில் இல்லை, அன்புக்குரியவனின் அரவணைப்பே என்பதை இனிக்கும் இலக்கிய வரிகளால் என்ன அழகாக சொல்கிறார் இனிக்கும் பண்டிகை உன்னுடனே கவிதையில். எண்கோவை காஞ்சி, ஏழுகோவை மேகலை, மதலிகை, கண்டிகை போன்ற பண்டைய அணிகலன்கள் பற்றியும் அறிந்துகொள்ளவும் முடிகிறது இக்கவிதையின் வாயிலாய்.

முகம் புதைத்தாள் அவன் ஆகம் கவிதையின் ஆரம்ப வரிகள்

பாண்டில் ஏற்றிச் சின்மலர் சூடி
இன்னே வருவாரா என் தலைவர் என
மேன்மாடத்தில் கரங்கள் பனிப்பப்…

இந்தக் கவிதையும், செம்பருத்தி அவிழ வராரோ, தலைவன் தலைவி பாகற்காய், இனிமையிலும் இனிமை போன்ற கவிதைகளும்  இந்தக் கவிதைப் புத்தகத்தில் உள்ள கவிதைகளின் தளத்தில் இணையவியலாத தனித்துவக் கவிதைகள். முற்றிலுமாய் மாறுபட்ட தளத்தில் இயங்கும் இக்கவிதைகள் கிரேஸின் இலக்கியத்திறனுக்கு இனியதொரு சான்று. கவிதைகளின் வரிகளை வாசிக்க வாசிக்க சங்க காலக் காட்சிகள் மனத்தில் விரிந்துகொண்டே போகின்றன. கவிதைகளின் அழகையும் இலக்கிய ரசனையையும் மீறி அவ்வளவு எளிதில் நம்மால் விடுபடவியலாது.

இயற்கையை வர்ணிக்கும் கவிதைகளில் ஒரு குழந்தையின் உற்சாகமும் கைக்கொட்டிக் களிக்கும் குதூகலமும்தான் தெரிகிறது. வாசிப்போரையும் குழந்தையாய் மாற்றும் ச்சூ.. மந்திரக்கவிதைகள்…

அணில் கவிதை அசத்துகிறது. அணிலின் கீச்சொலியை வார்த்தைகளால் சொல்லமுடியுமானால் எப்படி சொல்வது? இதோ கிரேஸ் கற்றுத்தருகிறாரே.. ஸ்குவீக் ஸ்குவீக்.. என்று.

அணிலின் ஸ்குவீக் ஒலிக்கு என்ன காரணம் என்று ஆராய்கிறார். அவரோடு சேர்ந்து நாமும் அந்த தென்னங்கீற்றிலாடும் அணிலை ரசிக்கிறோம்.

கடற்கரை கிளிஞ்சல்களும் அவர் கவிதை வரிகளில் வர்ணிக்கும் வரம்பெற்று விடுகின்றன.

ஆழியின் அளவிலாச் செழிப்பை
வாழ்ந்த உயிர்களின் அடையாளத்தை
அலைகளோடு அழகாய்ச் சொல்லும்
கரைசேர்ந்த கண்கவர் ஓடுகள்!

மண்ணிற்கும் விண்ணிற்கும் காதலாம். இடையில் தூதாய் தேவதாரு மரங்களாம். கவிஞரின் கற்பனை அபாரம்.. அல்லவா!

மனை உறை புறாவின் சேவலும் பெடையும் கொண்ட சிங்காரக்காதல் கண்ணுக்குள் விரிகிறது சிங்காரக் காதல் காட்டி கவிதை வரிகளை வாசிக்கும்போது..

இறகால் தூவுதல் போலே… கவிதையில் தாய் நீராட்டும் இளந்தாய் போல என்ற வரிகளில்தான் எவ்வளவு தாய்மை…  தாயைத் தெரியும். அதென்ன இளந்தாய்? இப்போதுதான் தாயாகியிருப்பவள். ஆம். புதிதாய்ப் பிள்ளை பெற்றுவந்த தன் மகளை மனைப்பலகையில் உட்காரவைத்து பதமான வெந்நீரால் குளிப்பாட்டுகிறாள் தாய். பூரித்து நிற்கிறாள் மகள். இது ஒரு கொடுப்பினை அல்லவா? தாய்மையின் இரு வரங்களையும் ஒருசேர அனுபவிக்கும் தருணமல்லவா அது? ஆஹா.. நினைக்கையிலேயே அந்த இதம் நெஞ்சுக்குள் பரவுகிறதே.. அந்த இளந்தாயைப்போலத்தான் தென்னையும் பூரித்து தன் பசுங்கரங்களில் மழையை ஏந்தித் தன் தளிர்மேனியில் மென்மையாய் இறக்கிக்கொள்கிறதாம்… வாசிக்கையிலேயே நெஞ்சத்துள் தோன்றும் நினைவுகள் இன்பம்!

இளங்காலை நேரமது. காக்கை அழைக்கிறது, அணில் கூப்பிடுகிறது, புறா பேசுகிறது. தென்னையும் தலையை ஆட்டிக் கேட்டுக்கொண்டிருக்கிறது.  தென்னைக்கு வேறு வேலை இல்லை. கேட்டுக்கொண்டிருக்கிறது. இப்படி நாமும் இயற்கையை ரசித்துக்கொண்டிருந்தால் இன்றைய பொழுது என்னாவது? கவிஞரை அங்கே குக்கர் அழைக்கிறது.. ரசனையும் கடமையுமாய் கலந்து புலர்கிறதாம் கவினுறு காலைகள்.. என்ன அற்புதமான ரசனை!

சமூக அக்கறையும், சமூகத்தின் வஞ்சமுகம் குறித்த விழிப்புணர்வையும், வக்கிரமுகம் குறித்த சாடல்களையும் முன்வைக்கின்றன சமூகம் குறித்த அவரது கவிதைகள். சமூகத்தின் அவலங்களும் அலட்சியங்களும் அவற்றில் சுட்டிக்காட்டப்படுகின்றன.

நாளைய சமுதாயம் கவிதையில் எப்படியெல்லாம் இன்றைய துளிர்கள் தவறான போக்கில் திசைதிருப்பப்படுகிறார்கள் என்பதை உதாரணங்களோடு விளக்குகிறார். நாமும் அந்தப் பட்டியலில் இருக்கிறோமா என்று நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ளவேண்டிய தருணமிது.

எது உண்மையான திருநாள் என்று கிரேஸ் சொல்வதில் இருக்கும் உண்மையை மறுப்பார் உண்டா?

சமூகமெனும் காட்டுக்கான விருட்சங்களுக்கு விதை தூவப்பட்டு வளர்ப்பதென்னவோ வீட்டுக்குள். இந்த துளிர் விடும் விதைகள் நல்லமுறையில் அன்பெனும் நீரூற்றப்பட்டும் நற்பண்புகள் என்னும் உரமிடப்பட்டு இனிமையான குடும்பச்சூழல் என்னும் வேலியிடப்பட்டு வளர்க்கப்பட்டால்தானே நல்லதொரு நேரிய விருட்சங்களாய் நாளை வளரக்கூடும். பெற்றவர்கள் செய்யும் பிழைகளுள் பிரதானமானது மற்றக்குழந்தைகளோடு தங்கள் குழந்தைகளை ஒப்பிட்டுப் பழிப்பது. அதைச் சுட்டும் கிரேஸின் வரிகள்

அவளைப் போல ஆடு
இவனைப் போல பாடு
அவனைப் போல படி
இவளைப் போல விளையாடு
அவனைப் போல அது செய்
இவளைப் போல இது செய்
விளங்காமல் விழித்த குழந்தை
விளம்பியது விழிவிரித்து
நானாக நான் இருத்தல் எப்பொழுது?
நானாக நான் இருத்தல் பிழையா?

குழந்தையின் பிஞ்சு நெஞ்சம் கேட்கும் கேள்வியைப் பெற்றோர் இனியாவது புரிந்துகொண்டு தங்கள் பேராசைகளைக் கைவிட்டு குழந்தைகளை குழந்தைகளாய்ப் பார்க்கவேண்டும்.

தாய்மையின் சிறப்பை சிலாகிக்கும் கவிதை சிலிர்ப்பூட்டுகிறது. மழலை உண்ணும் அழகோ மனம் நிறைக்கிறது.

படைத்திடும் அனைவருக்கும்
படைப்பாற்றல் அனைத்துமாகும்

என்கிறார் படைப்பு கவிதையில். நிரூபிக்கிறார் கட்டைவிரலும் ஆட்காட்டி விரலும் கவிபாடும் கவிதையில்.

கையெழுத்தைத் தொலைத்துவிட்டேனே என்று கவிமனம் கதறும் கவிதை வாசிக்கும் நம்மையும் சுருக்கென்று தைக்கிறது.

வாழ்க்கை பற்றிய கவிதைகளில் வெற்றிக்கான பாதையையும் காட்டுகிறார். வாழ்வு சுகப்படும் சூத்திரமும் காட்டுகிறார். கலங்கச் செய்யும் காலத்தின் கணக்கையும் கண்முன்னால் காட்டுகிறார்.

சுருக்கமாகத் துன்பங்கள் தீமைகள் எல்லாம்
தாமரை இலைநீராக அகற்றும் மனம் வேண்டும்

என்று சொல்லி வாழ்வின் இன்பதுன்பங்களை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தையும் காட்டுகிறார்.

மொத்தத்தில் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் வெகு அழகாக இக்கவிதை நூலில் அடக்கிக்காட்டியுள்ளார். தமிழின் இனிமையும், சாரமும் கொண்டு இயற்கை சார்ந்த கவிதைகளில் ஈர்ப்பும், சூழல் சார்ந்த கவிதைகளில் சுதாரிப்பும், காதல் சார்ந்த கவிதைகளில் களிப்பும், வாழ்க்கை சார்ந்த கவிதைகளில் உளத்தெளிவுமாக வசீகரிக்கிறார் அன்புத்தோழி கிரேஸ். வாழ்த்துகள் கிரேஸ்.